திரட்டுகள்
செட்டிநாட்டு வாயில் கதவு 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி, தமிழ் நாடு, தென்னிந்தியா

நுட்பமாகச் செதுக்கப்பட்ட இந்த வாயில் கதவு, 19ஆம் நூற்றாண்டிலிருந்து 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை தென்னிந்திய வீடுகளில் பரவலாகக் காணப்பட்ட அற்புதமான கட்டடக்கலை பாணிக்கு ஒரு சீரிய எடுத்துக்காட்டு. நாட்டுக்கோட்டை நகரத்தார் என்றழைக்கப்படும் செட்டியார்கள் வாழ்ந்துவரும் செட்டிநாட்டின் தனித்துவமிக்கக் கட்டடக்கலை பாரம்பரியம் இதில் வெளிப்படுகிறது.

செட்டியார் சமூகத்தினர் வட்டித்தொழிலும் வணிகமும் செய்து வந்தனர். வியட்னாம், மியன்மார், மலேசியா, சிங்கப்பூர் போன்ற தென்கிழக்காசிய வட்டாரங்களுக்குப் பயணித்த ஆரம்பகால இந்தியக் குடியேறிகளில் செட்டியார்களும் இடம்பெற்றிருந்தனர்.

தொழிலிருந்து கிடைத்த செல்வத்தைப் பயன்படுத்தி தங்களது பூர்வீகக் கிராமங்களில் மாளிகை போன்ற வீடுகளை செட்டியார்கள் கட்டினார்கள். பர்மிய, இந்தியத் தேக்கு மரத்தில் தூண்கள், உட்கூரைகள் மட்டுமன்றி, பிரம்மாண்டமாகச் செதுக்கப்பட்ட மரக் கதவுகளையும் அவ்வீடுகளில் காணலாம்.

செட்டிநாட்டு வட்டாரத்திலும் அதன் கைவினைஞர்களிடையிலும் நாயக்கர் சமய, கட்டடக் கலையின் செல்வாக்கு பரவியிருந்ததற்கு இந்த செட்டிநாட்டு வாயில் கதவின் விக்கிரகக்கலையே சான்று. எடுத்துக்காட்டாக, கதவின் சட்டத்தில் செதுக்கப்பட்டுள்ள வடிவங்கள், நாயக்கர் மாளிகைகளில் காணப்படும் சுவரோவியங்களைப் போலவே உள்ளன. வாயில் கதவில் மொத்தம் 5000 உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அன்னை கஜலட்சுமி நடுவில் வீற்றிருக்கிறார். நுணுக்கமாகச் செதுக்கப்பட்ட புராண வடிவங்கள் வாயிலுக்கு அழகு சேர்ப்பதோடு, வீட்டின் உரிமையாளருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தெய்வீகச் சக்தியின் பாதுகாப்பை வேண்டுகிறது.

More Details
செட்டிநாட்டு வாயில் கதவு 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி, தமிழ் நாடு, தென்னிந்தியா IHC

பொருத்தமான எதுவும் கிடைக்கவில்லை

மன்னிக்கவும், நீங்கள் தேடும் பக்கத்தைக் காணவில்லை

வேறு ஒன்றை தேடவும்